இரண்டு, மூன்று காட்சிகளில் நடித்த படங்களின் போஸ்டர்களில் என்னைத் தனியாக வைத்து வடிவமைக்க வேண்டாம் என நடிகர் யோகிபாபு கோரிக்கை விடுத்துள்ளார்.
சமீபத்தில் தெளலத் என்கிற படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் தனியாக யோகி பாபு இடம்பெற்றிருந்தார். இதனால் அந்தப் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ளதாக ரசிகர்கள் கருதினார்கள். இதையடுத்து, எனக்கும் தெளலத் படத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவித்துக் கொள்கிறேன் என ட்விட்டரில் தெரிவித்தார் யோகி பாபு.
இந்த விவகாரம் குறித்து விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் யோகி பாபு. அதில் அவர் கூறியுள்ளதாவது:
சில வருடங்களுக்கு முன்பு நான் நடித்த சிறிய படங்கள் எல்லாம் இப்போது வெளியாகின்றன. அந்தப் படங்களில் நான் இரண்டு, மூன்று காட்சிகளில் தான் நடித்திருப்பேன். இப்போது என்ன செய்கிறார்கள் என்றால், என்னைத் தனியாக வைத்து போஸ்டரை வடிவமைக்கிறார்கள். தயவு செய்து அதுபோல செய்யாதீர்கள்.
நமக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது. இந்த விஷயத்தில் விநியோகஸ்தர்கள், ரசிகர்கள் என எல்லோரும் ஏமாந்து போகிறார்கள். உங்க போஸ்டரைப் பார்த்து படம் வாங்கினேன் என்று சிலரும் நீங்கள் படம் முழுக்க இருப்பீர்கள் என்று நினைத்துதான் திரையரங்குக்குச் சென்றோம், ஆனால் சில காட்சிகளில் தான் வந்தீர்கள் என்று ரசிகர்கள் சிலரும் கூறியுள்ளார்கள். இதைக் கேட்கும்போது கஷ்டமாக உள்ளது.
தெளலத் என்கிற படத்தில் என்னை வைத்து தனியாக போஸ்டரை வெளியிட்டுள்ளார்கள். அதில் சிவன் தான் கதாநாயகன். தயவு செய்து இதுபோல செய்யாதீர்கள். நான் கதாநாயகனாக நடிக்கும் படங்களின் இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் இந்த விவகாரத்தால் என்னைத் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.
இது, விநியோகஸ்தர்கள், ரசிகர்களை ஏமாற்றுவது போல உள்ளது. இரண்டு, மூன்று காட்சிகளில் நடித்தால் அதை வைத்து நான் தான் கதாநாயகன் என விளம்பரப்படுத்த வேண்டாம். கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து அது போல செய்யாதீர்கள். இதனால் எனக்குத்தான் பாதிப்பாக உள்ளது. ரசிகர்களையும் ஏமாற்றுவதாக உள்ளது. என்னுடைய புகைப்படத்தைத் தனியாகப் போட்டு போஸ்டரை வடிவமைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.