முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தலைவி படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில் பாலிவுட் நாயகி கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் வகையில் தமிழ், ஹிந்தி மொழிகளில் இத்திரைப்படம் தயாராகி வருகிறது.
விஜய் இயக்கி வரும் இப்படத்துக்கான கதையை பாகுபலி, மணிகர்னிகா திரைப்படங்களின் கதாசிரியரும் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சைலேஷ் ஆர்.சிங் ஆகியோர் தயாரிக்கின்றனர். இசை - ஜி.வி. பிரகாஷ்.
கரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தலைவி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை ட்விட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை கங்கனா. அவர் கூறியதாவது:
புரட்சித் தலைவி ஜெயா அம்மாவின் நினைவு தினத்துக்காக தலைவி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பகிர்கிறேன். இப்படத்தின் படப்பிடிப்பை விரைவாக முடிக்கப் பாடுபடும் இயக்குநர் விஜய்க்கும் படக்குழுவினருக்கும் நன்றி. இன்னும் ஒரு வாரம் மட்டுமே மீதமுள்ளது என்றார்.