விஜய் நடித்த மாஸ்டர் படம் ஜனவரி 13-ல் வெளியீடு: திருப்பூர் சுப்பிரமணியம் தகவல்
இந்தப் படம் திரையங்கில் வெளியாக முக்கியக் காரணம் நடிகர் விஜய்...
விஜய் நடித்த மாஸ்டர் படம் ஜனவரி 13 அன்று வெளியாகவுள்ளதாக தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தகவல் அளித்துள்ளார்.
பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம், தமிழ்நாடு ஆக்டிவ் பிலிம் டிஸ்டிபியூட்டர்ஸ் அசோசியேஷன் செயலாளர் கே. ராஜமன்னார் ஆகியோர் மாஸ்டர் பட வெளியீடு பற்றி செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது:
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வரும் பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் அதிகாரப்பூர்வமாக எங்களிடம் அறிவிக்கச் சொல்லியுள்ளார். இதுவரைக்கும் விஜய் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தான் வெளியாகியுள்ளது. ஆனால் தற்போது முதன் முறையாக ஹிந்தியிலும் டப் செய்து ஜனவரி 13 ஆம் தேதி 3 மொழிகளிலும் மாஸ்டர் படம் வெளியாகிறது. இந்தப் படம் வடமாநிலங்களில் உள்ள ரசிகர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே போல ஆங்கில சப் டைட்டிலுடன் உலகம் முழுவதிலும் வெளியாகிறது.
கரோனாவுக்குப் பின்னர் இந்தப் படம் திரையங்கில் வெளியாக முக்கியக் காரணம் நடிகர் விஜய். கடந்த மார்ச்சில் படம் முடிவடைந்து தணிக்கைக்குத் தயாராக இருந்தபோதிலும் திரையரங்கில்தான் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். திரையங்க உரிமையாளர்களுக்கு மிகவும் உதவியாக இருந்துள்ளார். ஆகவே, அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேம். அவர் நினைத்திருந்தால் இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட்டிருக்க முடியும் அதே போல மாஸ்டர் படத் தயாரிப்பாளரான லலித்குமாருக்கு சுமார் ரூ.200 கோடி முதலீடு கைக்கு வராமல் உள்ள போதிலும் திரையங்களில் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அவருக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக முதல்வர் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் திரையங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். அவ்வாறு அனுமதி அளித்தால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடித்து திரையங்குகள் செயல்படும். தமிழ் திரைப்பட நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி, 8 வாரங்களுக்குப் பின்னர் தான் ஓடிடியில் வெளியிட வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் ஒப்பந்தம் போட வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமா அடுத்த தளத்துக்குச் செல்லும். சினிமா தொழில்தான் நடிகர்கள், இயக்குநர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரையும் வளர்த்து விட்டது. ஆகவே, இந்தத் தொழிலைப் பாதுகாக்க அனைத்து நடிகர்களுக்கு ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றனர்.