தர்பார் படம் வெளியாகும் போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ அனுமதி கோரி மனு!
பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் ஹெலிகாப்டரிலிருந்து திரையரங்கின் முன்பு மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சர்கார் படத்தையடுத்து ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன். இசை - அனிருத். தயாரிப்பு - லைகா நிறுவனம். இது ரஜினியின் 167-வது படம்.
ரஜினியின் ஜோடி - நயன்தாரா. இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி. தர்பார் படத்தின் வில்லன் - பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. தர்பார் படம் ஜனவரி 9 அன்று தமிழ், ஹிந்தி, தெலுங்கில் வெளிவரவுள்ளது. தர்பார் படத்துக்குத் தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. 2.39 மணி நேரம் படத்தின் கால அளவு என தணிக்கைச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் சேலம் மாவட்டத்தின் மெய்யனூர் கிராமத்தில் உள்ள ஏ.ஆர்.ஆர்.எஸ். திரையரங்கில் தர்பார் படம் வெளியாகும் தினத்தன்று, ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவ கனகராஜ் என்பவர் அனுமதி கோரியுள்ளார். பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனம் மூலம் ஹெலிகாப்டரிலிருந்து திரையரங்கின் முன்பு மலர் தூவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, குறிப்பிட்ட இடத்தை மேற்பார்வை செய்து விரிவான அறிக்கையினை அனுப்புமாறு சேலம் வருவாய் கோட்டாட்சியர், சேலம் மேற்கு வட்டாட்சியருக்குக் கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.