டகால்டிக்கு முன்னுரிமை அளித்து போட்டியிலிருந்து விலகிய சர்வர் சுந்தரம்!
ஒரே நாளில் சந்தானம் நடித்த இரு படங்கள் வெளியாகும் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் சந்தானம் நடித்த இரு படங்கள் வெளியாகும் சூழல் தவிர்க்கப்பட்டுள்ளது.
பலநாள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு வரும் வெள்ளியன்று வெளியாவதற்குப் பதிலாக பிப்ரவரி 14 அன்று சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம் படம் வெளியாகிறது.
பிரபல இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய விஜய் ஆனந்த், சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள டகால்டி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கதாநாயகி - ரித்திகா சென், இசை - விஜய் நரைன். இந்தப் படமும் ஜனவரி 31 அன்று வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இணை தயாரிப்பாளராக நடிகர் சந்தானம் உள்ளார்.
Advertisement
சந்தானம் நடிப்பில் உருவாகி நீண்ட நாளாக வெளியீட்டுக்குக் காத்திருக்கும் படம் - சர்வர் சுந்தரம். கெனன்யா பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் வைபவி ஷந்திலியா கதாநாயகியாக நடித்துள்ளார். மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்கள் ஏற்று நடித்துள்ளார்கள். கதை எழுதி இப்படத்தை இயக்கியவர், ஆனந்த் பால்கி. பி.கே.வர்மா ஒளிப்பதிவில், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். 2018 ஜூலை மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்ட இந்தப் படம் ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு தற்போது வெளியாகவுள்ளது.
இவ்விரு படங்களும் ஜனவரி 31 அன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டதால் குழப்பம் ஏற்பட்டது.
இந்த விவகாரம், தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் சென்றது. இரு படங்களும் வெவ்வேறு தேதிகள் வெளியாக வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்திய பிறகும் இரு தயாரிப்பாளர்களும் தங்கள் முடிவுகளில் உறுதியாக இருந்ததால் ஒரே நாளில் சந்தானத்தின் இரு படங்கள் வெளியாகும் சூழல் ஏற்பட்டது.
எனினும் சமீபத்தில் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கையின்படி, போட்டியிலிருந்து பின்வாங்கியது சர்வர் சுந்தரம் படம். இதன் வெளியீட்டுத் தேதி பிப்ரவரி 14-க்குத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனால் சிக்கல்கள் எதுவுமின்றி டகால்டி படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது.