கொச்சி: கோலிவுட் நடிகை பூர்ணாவிற்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவைச் சேர்ந்தவர் பூர்ணா (எ) ஷாம்னா காசிம். இவர் தமிழில் ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தில் அறிமுகமானார். தொடர்ந்து சமீபத்தில் வெளியான கொடிவீரன், சவரக்கத்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இதுவரை தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 40 படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பூர்ணாவிற்கு மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
இதுதொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத கொச்சி மாவட்டம் மராடு காவல் நிலைய அதிகாரி ஒருவர் செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, ‘தனக்கு அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் விடுத்ததாக நடிகை பூர்ணா அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் தற்போது நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.