நடிகர் ஸ்ரீகாந்த், தன்னுடைய 18 வருட திரை வாழ்க்கை குறித்து சினிமா எக்ஸ்பிரஸ் இணைய இதழுக்குப் பேட்டியளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
தமிழ் சினிமாவில் என்னை விடவும் இன்னொரு நடிகர் நான் சந்தித்த பிரச்னைகள், விபத்துகள், தடைகளைச் சந்தித்திருக்க மாட்டார். இதற்குப் பிறகும் நான் திரையுலகில் இருப்பதற்குக் காரணம் கடவுளும் ரசிகர்களும் தாம்.
காதல் வைரஸ் படத்தில் அறிமுகமாக இருந்தேன். அதற்காக ஒருவருடம் பயிற்சியெடுத்தேன். ஆனால் திடீரென ஒருநாளில் அப்படத்திலிருந்து விலக்கப்பட்டேன். நான் நொறுங்கிப் போனேன். பாரதிராஜா சாரால் நான் அறிமுகமாக இருந்தேன். கே. பாலசந்தர் சாராலும் அறிமுகமாவதற்குத் திட்டம் இருந்தது. ஆனால் அதுவும் நடக்கவில்லை.
12 பி படம் நான் முதலில் நடிக்கவேண்டியது. ரோஜா கூட்டம் படத்திலும் என் நண்பரின் பங்கு உள்ளது. திடீரென அவர் விலகிவிட்டார். பிறகுதான் சசி சாரால் நான் அறிமுகமானேன். சினிமா என்பது வட்டம். உங்களுக்கானதை நீங்கள் அடைவீர்கள். முயற்சி எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்றார்.