முகப்பு
செய்திகள்

கரோனா விளைவுகள்: மறு ஒளிபரப்பாகும் டிவி தொடர்கள்!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும் இதனால் சினிமா, டிவி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதாலும் டிவி தயாரிப்புப் பணிகள் முடங்கியுள்ளன.

Updated On : 30 மார்ச், 2020 at 11:14 AM
பகிர்:

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும் இதனால் சினிமா, டிவி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதாலும் டிவி தயாரிப்புப் பணிகள் முடங்கியுள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 33,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 1000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதாலும் இதனால் சினிமா, டிவி படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதாலும் டிவி தயாரிப்புப் பணிகள் முடங்கியுள்ளன. இதனால் கடந்த சனிக்கிழமை ஒளிபரப்பாகவேண்டிய பல டிவி தொடர்கள் ஒளிபரப்பாகவில்லை. கடந்த 18-ம் தேதி வரை படப்பிடிப்பு நடைபெற்றதை வைத்து கடந்த வாரம் (வெள்ளி வரை) எவ்விதப் பாதிப்பும் இல்லாமல் தொடர்கள் ஒளிபரப்பாகின. ஆனால் இந்த வாரத்துக்குத் தேவையான எபிசோட்களைப் படமாக்க முடியாமல் போனது. இதனால் இன்று முதல் பல தொலைக்காட்சிகளில் பழைய டிவி தொடர்கள் ஒளிபரப்பாகவுள்ளன, அதேபோல தற்போது ஒளிபரப்பாகி வரும் தொடர்களின் முக்கியக் காட்சிகளின் தொகுப்பும் தனியாக ஒளிபரப்பப்படவுள்ளன. தூர்தர்ஷனில் ராமாயணம், விஜய் டிவில் மஹாபாரதம் தொடர்கள் மறுஒளிபரப்பாகின்றன. விஜய் டிவியில் கடந்த வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியும் மீண்டும் ஒளிபரப்பாகிறது.

Advertisement

அதேபோல ரியாலிட்டி ஷோக்களின் ஒளிபரப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நிகழ்ச்சிகளும் மறுஒளிபரப்பு உத்தியைக் கடைப்பிடிக்கவுள்ளன. மேலும் பெரும்பாலான நேரங்களில் தங்களிடமுள்ள படங்களைக் கொண்டு நிலைமையைச் சமாளிக்கவும் தொலைக்காட்சிகள் முடிவெடுத்துள்ளன.

மேலும் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டாலும் பல தொடர்களில் பிரபல நடிகர்கள், நடிகைகள் நடிப்பதால் அப்போதும் படப்பிடிப்பில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது. இதனால் பிறமொழி தொடர்களை சிறிது காலத்துக்கு ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.