செய்திகள்

திரைப்படப் பணிகளுக்கு அரசு அனுமதி: முதல்வருக்கு தமிழ்த் தயாரிப்பாளர்கள் நன்றி!

DIN

திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் படப்பிடிப்புக்குப் பிந்தைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு அளித்துள்ளது. இதற்காக தமிழக முதல்வருக்குத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளார்கள்.

கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக திரைப்படம் மற்றும் சின்னத்திரைப் படப்பிடிப்புகள் அனைத்தும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பல தொலைக்காட்சிகளில் பழைய டிவி தொடர்களும் திரைப்படங்களும் ஒளிபரப்பாகி வருகின்றன.

கேரளத்தில் திரைப்படப் பணிகளுக்குப் பகுதியளவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் டப்பிங், இசை, சவுண்ட் மிக்சிங் ஆகிய பணிகள் இந்த வாரம் முதல் தொடங்கியுள்ளன.

திரைப்படப் படப்பிடிப்பு இல்லாமல், ரீ ரெக்காா்டிங், டப்பிங் உள்ளிட்ட பணிகளுக்கும் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ‘பெப்சி’ (தென்னிந்திய திரைப்பட தொழிலாளா் சம்மேளனம்) தலைவா் ஆா்.கே. செல்வமணி தமிழக முதல்வருக்குக் கடிதம் அனுப்பினார். சென்னை தலைமைச் செயலகத்தில் சின்னத்திரை சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜயகுமார், பொதுச் செயலாளர் குஷ்பு ஆகியோர் அமைச்சர் கடம்பூர் ராஜூவைச் சந்தித்து, சின்னத்திரைத் துறையில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை மேற்கொள்ள அனுமதி வேண்டி கோரிக்கை வைத்தார்கள்.

இந்நிலையில் திரைப்படம் மற்றும் சின்னத்திரையில் படப்பிடிப்புக்குப் பிந்தைய போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு அளித்துள்ளது. எனினும் படப்பிடிப்புக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

மே 11 முதல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளைத் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. படத்தொகுப்பு, குரல் பதிவு, கிராபிக்ஸ், நிற கிரேடிங், பின்னணி இசை, ஒலிக்கலவை போன்ற பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த முடிவுக்குத் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நன்றி தெரிவித்துள்ளார்கள். முதல் அமைச்சருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கும் நன்றி தெரிவித்து பாரதிராஜா, எஸ். தாணு உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT