சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா, ஆர். பார்த்திபன் நடிப்பில் ஜேஜே பிரட்ரிக் இயக்கியுள்ள படம் - பொன்மகள் வந்தாள். இசை - கோவிந்த் வசந்தா.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக பொது முடக்கம் அமலில் உள்ளதால் திரையரங்குகள் அனைத்தும் கடந்த 60 நாள்களுக்கும் மேலாக இயங்காமல் உள்ளன. இந்த நிலையில் பொன்மகள் வந்தாள் படம் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது.
பொன்மகள் வந்தால் படத்தில் ஜோதிகாவுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் (AIDWA) போராடுவதாகக் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனால் படத்தில் மாதர் சங்கத்தைத் தவறாகச் சித்தரித்துள்ளதாகப் பலரும் இயக்குநர் ஜேஜே ப்ரட்ரிக்-கிடம் புகார் அளித்தார்கள். இதையடுத்து மாதர் சங்கத்துக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளார் ப்ரட்ரிக். அதில் அவர் கூறியுள்ளதாவது:
பொன்மகள் வந்தால் படத்தில் நாயகி நீதிமன்றத்துக்கு வரும் இடத்தில் பெண்கள் போராட்டம் செய்வதை முன்னிட்டு தோழர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளார்கள். AIDWA அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது எங்கள் கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாக மன்னிப்பு கேட்பதோடு AIDWA இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க உறுதியளிக்கிறோம். இந்தத் திரைப்படத்துக்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களிலிருந்து நிறைய செய்திகளை எடுத்துக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் நாங்கள் நன்றிக் கடன்பட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.