தினமும் 45,000 பேருக்கு உணவளிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்
மும்பையில் தினமும் 45,000 பேருக்கு உணவளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்
மும்பையில் தினமும் 45,000 பேருக்கு உணவளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 7,400 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவால் வேலையை இழந்தும் வருமானம் இல்லாமலும் பலர் தவிக்கிறார்கள். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், மும்பையில் தினமும் 45,000 பேருக்கு உணவளித்து வருகிறார். மும்பை மாநகராட்சியுடன் இணைந்து இந்த உதவிகளை அவர் செய்து வருகிறார். மேலும் தனது ஹோட்டலை மருத்துவ ஊழியர்கள் பயன்படுத்துவதற்கும் அனுமதி வழங்கியுள்ளார். இதுபற்றி ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
Advertisement
இந்தக் கடினமான நேரத்திலும் தங்குவதற்கு வீடும் உணவும் நமக்குக் கிடைத்துள்ளது. ஆனால் பல நாள்களாக உணவு கிடைக்காமல் பலர் சிரமப்படுகிறார்கள். எனவே எனது தந்தை பெயரில், சக்தி அன்னதானம் என்கிற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளேன். இதன்படி மக்களுக்கு உணவும் அத்தியாவசியப் பொருள்களும் வழங்கி வருகிறேன். என்னால் முடிந்தவரை பலருக்கு உதவ வேண்டும் என்பதே என் எண்ணம் என்று கூறியுள்ளார்.
கள்ளழகர், நெஞ்சினிலே ஆகிய தமிழ்ப் படங்களின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான சோனு சூட், மஜ்னு, ராஜா, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி, தேவி 2 போன்ற ஏராளமான தமிழ்ப் படங்களிலும் ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.