தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் தினமும் மூன்று காட்சிகள் திரையிடுவது என திரையரங்கு உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்க திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டும் அனுமதியளிக்கப்படும் எனத் தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது. கரோனா பரவலைத் தடுக்கப் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 10 முதல் திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டும் அனுமதியளிக்கப்படுகிறது.
மேலும் மால் திரையரங்குகளில் இரவு 9 மணிக்கும் தனி திரையரங்குகளை இரவு 10 மணிக்கும் மூடவேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் திரையரங்குகளை இயக்க முடியாது.
இதனால் தலைவி, எம்.ஜி.ஆர். மகன் போன்ற புதிய படங்களின் வெளியீடுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து திரையரங்குகளை இயக்குவது பற்றி காணொலி வாயிலாக திரையரங்கு உரிமையாளர்கள் ஆலோசனை நடத்தினார்கள்.
இதன்படி, அரசின் விதிமுறைகளைப் பற்றி திரையரங்குகளைத் தொடர்ந்து இயக்க திரையரங்கு உரிமையாளர்கள் முடிவெடுத்துள்ளார்கள். 50% பார்வையாளர்களுடன் தினசரி 3 காட்சிகள் மட்டும் திரையிடுவது எனக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இரவு 9.30 மணிக்குள் அனைத்துத் திரையரங்குகளும் மூடப்படவுள்ளன.
திரையரங்கு உரிமையாளர்களின் முடிவால் கர்ணன், சுல்தான் போன்ற படங்கள் தொடர்ந்து திரையரங்குகளில் திரையிடப்படுகின்றன.