த்ரிஷ்யம் 2: அஸ்வினுக்கு மோகன்லால் நன்றி!
த்ரிஷ்யம் 2 படத்தைப் பாராட்டிய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்.
த்ரிஷ்யம் 2 படத்தைப் பாராட்டிய கிரிக்கெட் வீரர் அஸ்வினுக்கு மோகன்லால் நன்றி தெரிவித்துள்ளார்.
மோகன்லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013-ல் வெளியான மலையாளப் படம் - த்ரிஷ்யம்.
கேரளாவில் மகத்தான வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் தமிழில் கமல், கெளதமி நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்கிற பெயரில் வெளிவந்து இங்கும் வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமல்லாமல் ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, சீனம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தமிழைத் தவிர இதர மொழிகளில் வெளியான ரீமேக்கை வேறு இயக்குநர்கள் இயக்கினார்கள்.
Advertisement
Advertisement
ரூ. 50 கோடி வசூலைப் பெற்ற முதல் மலையாளப் படம் என்கிற பெருமை த்ரிஷ்யம் படத்துக்கு உண்டு. இதனால் இதன் அடுத்த பாகத்தை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள்.
மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் த்ரிஷ்யம் 2 மலையாளப் படம் உருவானது.
திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட த்ரிஷ்யம் 2 படம், பிப்ரவரி 19 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்துக்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு அளித்து சமூகவலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுதியுள்ளார்கள்.
இப்படத்தைப் பாராட்டி ட்விட்டரிலும் தனது யூடியூப் சேனலிலும் கருத்து தெரிவித்துள்ளார் கிரிக்கெட் வீரர் அஸ்வின். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
த்ரிஷ்யம் 2 படத்தில் நீதிமன்றக் காட்சியில் அந்தத் திருப்பத்தை மோகன்லால் உருவாக்கியபோது நான் மிகவும் ரசித்தேன். நீங்கள் பார்க்கவில்லையென்றால் த்ரிஷ்யம் 1-லிருந்து மீண்டும் ஆரம்பியுங்கள். அபாரம் என்றார்.
இதற்கு மோகன்லால் பதில் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
(கிரிக்கெட் ஆட்டங்களினால்) பரபரப்பாகும் இருக்கும் இந்தச் சமயத்தில் நேரம் ஒதுக்கி த்ரிஷ்யம் 2 படத்தைப் பார்த்து, அதுபற்றி பேசியதற்கு நன்றி. எங்களுக்கு இது முக்கியமானது. உங்களுடைய கிரிக்கெட் ஆட்டங்களுக்கு வாழ்த்துகள் என்றார்.