விவசாயிகள் போராட்டத்தை ஆதரிக்கும் இந்தியர்கள் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் சிறையிலடைக்கப்பட வேண்டும் என்றும் நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் பல்வேறு பதிவுகளில் அவர் பதிவிட்டுள்ளதாவது:
"விவசாயிகளை பயங்கரவாதிகள் என்று அழைத்ததற்காக என்னை விளம்பரத் தூதராக வைத்துக்கொள்ள முடியாது என 6 நிறுவனங்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டன. ஒவ்வொரு இந்தியருக்கும் இன்று நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். தேச விரோத நிறுவனங்கள் உள்பட இந்த வன்முறையை ஆதரிக்கும் ஒவ்வொரும் பயங்கரவாதிகளே.
ஒவ்வொரு மாதமும் வன்முறை மற்றும் ரத்த வெள்ளத்தால் சோர்வடைந்துவிட்டேன். தில்லி, பெங்களூரு தற்போது மீண்டும் தில்லி."
மேலும் ஹிந்தியில் பேசும் விடியோ பதிவு ஒன்றில் அவர் கூறியது:
"உலகத்தின் முன்பு இன்று நாம் நகைப்புக்குள்ளாகியுள்ளோம். நம்மிடம் எந்த தன்மானமும் மீதம் இல்லை. விருந்தினராக மற்ற நாட்டு பிரதமர் இருந்தால்கூட கவலையில்லை, அவர்கள் முன்பு நாம் நிர்வாணமாக இருப்போம். இது நீடித்துக்கொண்டே இருந்தால் நாட்டில் எவ்வித வளர்ச்சியும் இருக்காது. விவசாயிகள் போராட்டம் என்று அழைக்கப்படும் இதை யார் ஆதரித்தாலும் அவர்கள் சிறையிலடைக்கப்பட வேண்டும். நாட்டையும், அரசையும், உச்ச நீதிமன்றத்தையும் அவர்கள் நகைப்புக்குள்ளாக்கிவிட்டனர்."
தில்லியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விவசாயிகளின் டிராக்டர் பேரணி குறித்தே கங்கனா இவ்வாறு பதிவிட்டுள்ளார்.