பாக்கியலட்சுமி தொடரில் இருந்து விலகியதன் காரணத்தை நடிகை ஜெனிஃபர், தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
கரோனா தொற்று பரவல் மற்றும் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு காரணமாக, கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளதன் காரணமாக, மக்களுக்கு கைகொடுப்பது சின்னத்திரைத் தொடர்கள் தான்.
இதனால் கடந்த ஒரு வருடமாக சின்னத்திரைத் தொடர்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. சின்னத்திரைத் தொடர்களைப் பற்றி சமூக வலைதளங்களில் இடம் பெறும் ரசிகர்களின் பதிவுகளைப் பார்த்தாலே இதற்கு சான்று.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலம். அந்தத் தொடரில் ராதிகா என்ற வேடத்தில் நடித்து வந்தவர் ஜெனிஃபர். இந்த நிலையில் திடீரென அவருக்கு பதிலாக ராதிகா என்ற வேடத்தில் பிக்பாஸ் புகழ் ரேஷ்மா நடிக்கத் தொடங்கினார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இதுகுறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.
இதனையடுத்து ரசிகர்களின் சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் விளக்கமளித்துள்ளார். அதில், தான் கர்ப்பமாக இருப்பதாகவும், இந்த வருடம் டிசம்பர் மாதம் தனக்கு குழந்தை பிறக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தான் நடித்துவரும் வேடம் எதிர்மறை கதாப்பாத்திரமாக இருப்பதால் மேற்கொண்டு இந்தத் தொடரில் நடிப்பது நன்றாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.