செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு இடைக்காலத் தடை!
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் - நெஞ்சம் மறப்பதில்லை...
இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள படம் - நெஞ்சம் மறப்பதில்லை. நந்திதா, ரெஜினா ஆகியோர் நடித்துள்ள படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ளது.
2017-ம் ஆண்டு வெளியாக வேண்டிய இந்தப் படம் பல தடங்கல்களால் வெளிவராமல் உள்ளது.
இப்படத்தின் ஒரு காட்சி நேற்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
Advertisement
இந்நிலையில் மார்ச் 5 அன்று வெளிவருவதாக இருந்த நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இப்படத்தைத் தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம் ரூ. 1.24 கோடி கடன் வைத்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் நிறுவனம், எனை நோக்கிப் பாயும் தோட்டா படத்துக்காக ரூ. 2.42 கோடி கடன் கேட்டது. படத்தை வெளியிடுவதற்கு முன்பு ரூ. 1.75 கோடியைத் திருப்பிச் செலுத்தியது. மீதமுள்ள ரூ. 1.24 கோடியைத் திருப்பிச் செலுத்தாமல் நெஞ்சம் மறப்பதில்லை படத்தை வெளியிடவுள்ளார்கள். இதனால் கடன் நிலுவைத் தொகையை வட்டியுடன் செலுத்தும்படி ரேடியன்ஸ் விடியோ நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நெஞ்சம் மறப்பதில்லை படத்துக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.