நமீதா தியேட்டர் என்கிற பெயரில் புதிய ஓடிடி தளம் தொடங்கவுள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாகக் கடந்த வருடம் திரையரங்குகள் பல மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இதனால் திரையரங்குகளில் படங்களைப் பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு இல்லாமல் இருந்தது. கரோனாவால் திரைப்படத் துறையில் ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழலில், சினிமாவின் மாற்றுத் தளமாக ‘ஓடிடி’ அமைந்திருக்கிறது. சினிமா ரசிகர்கள் வீட்டுக்குள் இருந்து தொலைக்காட்சி, இணையம் வழியாக படங்களைப் பார்த்து வருகிறார்கள். இதனால் நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்கள் அதிகம் பலனடைந்துள்ளன. கரோனா 2-வது அலையால் மேலும் பல படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளன.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி பல புதிய ஓடிடி தளங்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் நடிகை நமீதாவின் பெயரில் புதிதாக ஓடிடி தளமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. நமீதா தியேட்டர் என்கிற பெயரில் ஆரம்பிக்கப்படும் ஓடிடி தளங்களில் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் இணையத் தொடர்கள் மற்றும் படங்கள் வெளியாகவுள்ளன. இந்த ஓடிடி தளத்தின் பிராண்ட் பார்டனராக நமீதாவும் நிர்வாக இயக்குநராக ரவி வர்மாவும் பணியாற்றவுள்ளார்கள். புதிய இயக்குநர்கள், புதிய தயாரிப்பாளர்கள், புதிய நடிகர்கள் எனப் பலருக்கும் வாய்ப்பளிக்கும் ஓடிடி தளமாக இது இருக்கும் என நமீதா தெரிவித்துள்ளார்.
நமீதா தியேட்டர் ஓடிடி தளத்தில் அடுத்த மாதம் முதல் படங்கள் வெளியாகவுள்ளன.