மக்களிடம் தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனப் பிரபல ஹிந்தி நடிகை ஆலியா பட் கூறியுள்ளார்.
இந்தியாவில் கரோனா பாதிப்பின் இரண்டாம் அலை பல மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றின் அன்றாட புதிய பாதிப்புகள் நேற்று 2 லட்சத்து 8 ஆயிரமாகப் பதிவாகியுள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தில் மேலும் ஒரு புதிய மைல்கல் சாதனையாக, இந்தியாவில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கை 20 கோடியைக் கடந்துள்ளது. புதன்கிழமை காலை வரை 20,06,62,456 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் மக்களிடையே தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனப் பிரபல நடிகை ஆலியா பட் கூறியுள்ளார். இன்ஸ்டகிராமில் அவர் கூறியதாவது:
கரோனாவுக்கு எதிரான நமது போரில் அறிவியல் நமக்கு உதவுகிறது. அறிவியல் நமக்கு தடுப்பூசியைத் தந்துள்ளது. தடுப்பூசிகள் நமக்கு நம்பிக்கையைத் தந்துள்ளன. கரோனாவை முடிவுக்குக் கொண்டு வந்து நம் வாழ்வை மீட்டுக்கொள்ள தடுப்பூசியால் ஒரு வழி கிடைத்துள்ளது. தடுப்பூசி வந்தபிறகும் மக்களிடையே தயக்கம் நிலவுகிறது. இதற்குத் தவறான தகவல்களே காரணம். சமுகவலைத்தளங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றன. தடுப்பூசியைச் செலுத்திக்கொள்வது ஒருவருடைய உரிமை. ஆனால் தகுந்த ஆதாரங்களைக் கொண்டு தடுப்பூசி பற்றி அறிந்துகொள்ளலாம். அதன்பிறகு தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ள முடிவெடுக்கலாம். இதனால் ஐந்து பாகங்கள் கொண்ட தடுப்பூசி விழிப்புணர்வு விடியோக்களை வெளியிடுகிறேன். தடுப்பூசி பற்றி மருத்துவர்களும் மருத்துவத்துறையைச் சார்ந்தவர்களும் பேசுவார்கள். பாட்காஸ்டில் விடியோவாக வெளியிடப்படும். இந்தத் தொடரின் மூலம் தடுப்பூசி பற்றிய உங்களுடைய சந்தேகங்களுக்குப் பதில் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.
இயக்குநர் மகேஷ் பட்டின் மகளான ஆலியா பட், 2012-ல் கரண் ஜோஹர் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். 2 ஸ்டேட்ஸ், டியர் ஜிந்தகி, ஹைவே, உத்தா பஞ்சாப், ராஸி, கல்லி பாய் போன்ற படங்களில் நடித்துப் புகழ் பெற்றார்.