இந்திய கிரிக்கெட்டில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி, சர்வதேச அளவில் முன்னணி அணிகளில் ஒன்றாக இருப்பதற்கு முக்கியக் காரணமாக இருப்பவர், மூத்த வீராங்கனை மிதாலி ராஜ். தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்த துரைராஜ் - லீலாராஜ் ஆகியோருக்குப் பிறந்த மிதாலி ராஜ், ஆரம்ப காலங்களில் ராஜஸ்தானின் ஜோத்பூரில் வசித்தார். பிறகு மிதாலியின் குடும்பம் பிறகு ஹைதராபாத்துக்கு இடம்மாறியது.
இந்திய அணிக்காக 12 டெஸ்ட், 232 ஒருநாள், 89 டி20 ஆட்டங்களில் 39 வயது மிதாலி ராஜ் விளையாடியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் தனது 22-வது வருடத்தை வரும் ஜூன் 26 அன்று பூர்த்தி செய்தார் மிதாலி. ஆடவர், மகளிர் என இரு தரப்பிலும் வேறு யாரும் சர்வதேச கிரிக்கெட்டில் இவ்வளவு காலம் நீடித்ததில்லை என்பதே மிதாலியின் பெருமையை நன்கு உணர்த்தும்.
2019 டிசம்பர் 3, மிதாலி ராஜின் பிறந்த நாளன்று அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
மிதாலி ராஜ் வேடத்தில் டாப்சி நடிக்கும் படத்தை ராகுல் தொலாகியா இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. சபாஷ் மித்து என இப்படத்துக்குப் பெயரிடப்பட்டது. தயாரிப்பு - வியாகாம்19 ஸ்டூடியோஸ். சபாஷ் மித்து படத்தை இயக்குவதிலிருந்து ராகுல் தொலாகியா திடீரென விலகினார். அவருக்குப் பதிலாக ஸ்ரீஜித் முகர்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த வருடம் பிப்ரவரி 4 அன்று படம் வெளிவருவதாக இருந்தது. பிறகு வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் சபாஷ் மித்து படம், ஜூலை 15 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.