சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் எடுத்த செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ரஜினி கதையில் அவரே தயாரித்து நடித்த பாபா திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ரீரிலீஸ் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் சில காட்சிகளுக்கு மீண்டும் ரஜினி டப்பிங் வாய்ஸ் கொடுத்துள்ள நிலையில், இசையை டால்பி தொழில்நுட்பத்திற்கு மேம்படுத்தும் பணியும் நடைபெற்று வருகின்றது. பாபா படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் படத்தை ரீரிலீஸ் செய்ய இசை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
இதையும் படிக்க | டிமாண்டி காலனி 2 படப்பிடிப்பு தொடக்கம்
இந்நிலையில், ரஜினியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்த ஏ.ஆர்.ரஹ்மான் அவருடனும், ஐஸ்வர்யா ரஜினியுடனும் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார்.
அந்தப் புகைப்படத்தை ‘இரண்டு அற்புதமான மனிதர்கள் சந்திக்கும் போது’ எனக் குறிப்பிட்டு ஐஸ்வர்யா ரஜினி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றது.
இதற்கிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் என்பதும், இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.