'சர்தார்' மற்றும் 'பிரின்ஸ்' படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் வெளியாகாத தீபாவளியாக அமைந்துவிட்டது சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படமும், கார்த்தியின் 'சர்தார்' படமும் வெளியாகியிருக்கின்றன.
'டாக்டர்', 'டான்' என அடுத்தடுத்து இரண்டு வெற்றிப்படங்களுக்கு பிறகு வெளியாகும் படம் என்பதால் சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு குடும்ப ரசிகர்களின் ஆதரவு இருக்கிறது.
இதே போல நடிகர் கார்த்தியின் படம் எப்பொழுதும் சுவாரசியமான கதையம்சத்துடன் கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே இருக்கிறது.
இந்த நிலையில் இருவரது படங்களும் வெற்றிபெற பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்.
'பிரின்ஸ்' படம் தொடர்பாக அவரது வாழ்த்து செய்தியில், ''சிவகார்த்திகேயன், அனுதீப், சத்யராஜ் சார், இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட பிரின்ஸ் குழுவினரை மனதார பாராட்டுகிறேன். கலக்குங்க'' என்று குறிப்பிட்டுள்ளார்.
கார்த்தியின் சர்தார் படம் தொடர்பாக சூர்யா பதிவிட்டுள்ளதாவது, ''நல்ல கதை பெரிய வெற்றியைப் பெறும். கார்த்தி, இயக்குநர் மித்ரன், ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், படத்தொகுப்பாளர் ஆண்டனி எல்.ரூபன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் சர்தார் படம் தொடர்பாக நல்ல விஷயங்களைக் கேள்விப்படுகிறேன். எல்லா இடத்திலும் சர்தார் படத்துக்கு நேர்மறை விமர்சனங்கள் கிடைத்துவருவது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. வாழ்த்துகள்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.