முகப்பு
செய்திகள்

''வாழும்போதே வரலாறாக ... '' - முதல்வருக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் புகழாராம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Updated On : 11 பிப்ரவரி, 2024 at 11:56 AM
பகிர்:

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. 

கடந்த 2009 ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான தமிழ் திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டும் வழங்கப்படாமல் இருந்தது. 

இந்த நிலையில் தற்போது விருது வழங்கும் விழா நாளை (செப்டம்பர் 4) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. அப்போது கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்பட, சின்னத்திரை கலைஞர்களுக்கும் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்படவுள்ளன. 

இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் தேனாண்டாள் முரளி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், ''2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ள நடிகர், நடிகையர், இயக்குநர்கள், ஏனைய தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகளையும், பரிசுத் தொகையினையும் வழங்கிடவும் 2015 ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான விருதுகளுக்காக தேர்வு செய்திட குழு அமைத்திடவும் கோரிக்கை வைத்தோம்.

 மேலும் சிறு முதலீட்டு படங்களில் தமிழக அரசின் மானியத்திற்காக 2015, 2016, 2017 ஆகிய மூன்று ஆண்டுகளுக்காக விண்ணப்பித்துள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு மானியத் தொகையினை வழங்கி அவர்களின் வாழ்வில் விளக்கேற்றிட வேண்டி தமிழக முதல்வரிடம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் வேண்டுகோள் வைத்தோம். 

மக்கள் அனைவரையும் ஒரு சேர அரவணைத்து செல்லும் நம் முதல்வர் முதல் கோரிக்கையை நிறைவேற்றி ஆணை பிறப்பித்துள்ளார். 

வாழும்போதே வரலாறாக வாழ்ந்துவரும் நம் முதல்வர் நமது அடுத்தடுத்த கோரிக்கைகளையும் நிச்சயம் நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கை திரை உலகினரிடம் நிறையவே உள்ளது. தமிழக முதல்வருக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பிலும் ஒட்டுமொத்த தமிழ் திரைஉலகம் சார்பிலும் இரு கரம் குவித்து நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

இதற்கு உறுதிணையாக இருந்த செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கும் அதிகாரிகளுக்கும் நன்றியைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தமிழக அரசின் விருது பெறும் அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுக்களும்'' இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.