எல்ஐசி பெயரை வைத்தால் விக்னேஷ் சிவன் மீது வழக்குத் தொடர்வேன்: இயக்குநர் குமரன்
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ள படத்திற்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்திற்கு லவ் இன்சுரன்ஸ் கார்பரேஷன் (எல்ஐசி) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்திற்கு வைத்த பெயரை ஏற்கனவே பதிவு செய்திருப்பதாக இயக்குநர் எஸ்.எஸ்.குமரன் தெரிவித்ததோடு அதுகுறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில்,
“விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு L I C என்று பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் LIC என்கிற பெயரை 2015 ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் (suma pictures) இன் வாயிலாக பதிவு செய்து வைத்திருக்கிறேன்.
இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தபெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார்.
ஆனால் LIC என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார். அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும்.
இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரதன்மை கொண்டது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன்.
LIC என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.