நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் ரஞ்சித் மீண்டும் சின்னத்திரை தொடரில் நடிக்கவுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஞ்சித் களமிறங்கியுள்ளார்.
வெள்ளித்திரையில் பல திரைப்படங்களில் நாயகனாக நடித்தவர் ரஞ்சித். தமிழில் 'சிந்துநதிப் பூ' என்ற படத்தின் மூலம் அறிமுகமானர். அதன்பிறகு 40-க்கும் அதிகமான தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடந்த 2020ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே எனும் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். 2021 அக்டோபர் வரை ஒளிபரப்பான அந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
அதனை அடுத்து சிறிய இடைவேளைக்குப் பிறகு தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சித் தொடரில் களமிறங்கியுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார்.
இது தொடர்பான முன்னோட்ட விடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இதில், பாக்கியலட்சுமியுடன் மோதலில் உருவாகும் சந்திப்பு பிறகு அவரை ஊக்குவிக்கும் நலம் விரும்பியாக மாறுகிறது.
இவர் கோபிக்கு எதிராக பயணிப்பார் என ரசிகர்கள் கணித்துள்ளனர். இதனால் இந்தத் தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.