பிறந்தநாளில் பெண் குழந்தைக்குத் தாயான சீரியல் நடிகை!
தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், சின்னத்திரை நடிகைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடித்துவந்த நடிகை காயத்ரி பெண் குழந்தைக்குத் தாயாகியுள்ளார். அவர் இன்று தனது 36வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
சின்னத்திரையில் பிரபல தம்பதியான காயத்ரி - யுவராஜ் ஆகியோருக்கு குழந்தை பிறந்துள்ளது. நடிகை காயத்ரி சமீபகாலமாக கருவுற்றிருந்த புகைப்படங்களையும், பிரசவத்துக்காக மேற்கொண்டுவரும் பயிற்சிகளையும் ரசிகர்களுக்கு விடியோவாக அவ்வபோது வெளியிட்டுவந்தார்.
சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்துகொண்டனர். இந்நிலையில், நடிகை காயத்ரி - யுவராஜ் தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சமூக வலைதள பக்கத்தில் யுவராஜ் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் யுவராஜ் வெளியிட்டுள்ள பதிவில், மகிழ்ச்சிகரமான செய்தி. இளவரசி பிறந்திருக்கிறாள். இன்று அதிகாலை பெண் குழந்தை பிறந்ததை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அம்மாவின் பிறந்தநாளை இளவரசியும் பகிர்ந்துகொண்டாள். தாயும் சேயும் நலமாக உள்ளனர். அன்புக்கும் ஆசிர்வாதங்களுக்கும் நன்றிகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் இந்த பதிவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவந்த மீனாட்சி பொண்ணுங்க தொடரில் நடிகை காயத்ரி நடித்துவந்தார். தொலைக்காட்சி தொகுப்பாளரான தனது பயணத்தை தொடங்கிய காயத்ரி, தென்றல் தொடரில்நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பெற்றார்.
அதனைத் தொடர்ந்து அழகி, சரவணன் மீனாட்சி -3, சித்தி -2, அரண்மனைக் கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் -2 உள்ளிட்ட தொடர்களிலும் காயத்ரி நடித்துள்ளார். இவரின் கணவர் யுவராஜ் நடன இயக்குநர் மற்றும் நடிகர்.