பிரபல சின்னத்திரை நடிகை தீபா இரண்டாவது திருமணம் செய்துகொண்டுள்ளார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பான ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ தொடர் மூலம் பிரபலமானவர் தீபா. இந்த தொடரில் வடிவு என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரியமான தோழி, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அன்பே சிவம் தொடர்களிலும் நடித்து வருகிறார். ஏற்கெனவே திருமணமான தீபா முதல் கணவருடன் முறைப்படி விவாகரத்து பெற்று தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.
இதனிடையே சாய் கணேஷ் பாபுவை, தீபா இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. தீபாவை மறுமணம் செய்ய சாய் கணேஷ் வீட்டில் எதிர்ப்புகள் கிளம்பியதால் இருவரும் ரகசியமாக பதிவுத் திருமணம் செய்துகொண்டனர் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சாய் கணேஷ் பாபுவை தான் இரண்டாவது திருமணம் செய்ததை உறுதிப்படுத்தும் விதமாக திருமண விடியோவை இணையத்தில் தீபா வெளியிட்டுள்ளார். சாய் கணேஷ் பல தொடர்களில் தயாரிப்பு மேலாளராகப் பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.