பிக் பாஸ்: கல்வி சர்ச்சை பற்றி பவா செல்லதுரை விளக்கம்!
எழுத்தாளர் பவா செல்லதுரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றபோது நடந்த கல்வி குறித்த விவாதம் பற்றி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளர்களில் ஒருவரான எழுத்தாளர் பவா செல்லதுரை நிகழ்ச்சி ஆர்ம்பித்த முதல் வாரமே தனது உடல்நிலை மற்றும் மனநிலை பாதிப்பின் காரணமாகத் தெரிவித்துத் தாமாகவே முன்வந்து வெளியேறினார்.
பிக் பாஸின் முதல் வார நிகழ்ச்சியில் விசித்திரா - ஜோவிகா இருவருக்கும் இடையே நடந்த சச்சரவில், கல்வி அவசியமில்லை என பவா செல்லதுரை சொன்னது கடுமையான எதிர்ப்புகளைச் சமூக ஊடகங்களில் ஏற்படுத்தியது. 'எழுத்தாளராக இருந்துகொண்டு இப்படிப் பேசலாமா?’ என பார்வையாளர்கள் தங்கள் கருத்தை முன்வைத்தனர்.
நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த நிலையில், பவா செல்லதுரை பிக் பாஸில் நடந்த நிகழ்வுகள் பற்றிய அவருடைய விளக்கத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: எதிர்நீச்சல் - பிக் பாஸ்: என்ன ஒற்றுமை?
அதில் அவர் குறிப்பிட்டதாவது, "கல்வி நமக்கு எதுவும் செய்யாது என நான் மட்டுமல்ல. ஒரு பொது சமூகத்தின் எதிரிகூட சொல்ல மாட்டான். இந்த வகுப்பறைக் கல்வியில் போதாமைகள் இருப்பதைப் பேசிக் கொண்டிருக்கிறவர்களில் கடைசி வரிசை ஆள் நான்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “ஜோவிகாவை சமாதானப்படுத்தப்போய் சொன்ன வார்த்தைதான் அது. எடிட் செய்யப்பட்ட அக்காட்சியை இப்போது பார்த்தபோது நான் முற்றிலும் தவறாக அர்த்தப்படுமாறு பேசியிருக்கிறேன் என்று தெரிகிறது. வகுப்பறைகளைத் தாண்டியும் கற்றுக்கொள்ள முடியும் என்பது மட்டுமே நான் சொல்ல வந்த கருத்து. அது தவறான அர்த்தத்தில் வெளிப்பட்டதை முழு மனதோடு ஒப்புக்கொண்டு என் மன்னிப்பை தமிழ் சமூகத்தின் முன்வைக்கிறேன்” என பவா செல்லதுரை தெரிவித்துள்ளார்.