நடிகை திவ்யா ஸ்பந்தனாவுக்கு என்ன ஆனது? வதந்தியால் ரசிகர்கள் அதிர்ச்சி!
நடிகை திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் காலமானார் என்கிற வதந்தி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை திவ்யா ஸ்பந்தனா கன்னட படங்களிலும் தமிழ் படங்களிலும் நடித்து பிரபலமானவர். தமிழில் சிம்புவுடன் ‘குத்து’ படத்தில் அறிமுகமானவர் தொடர்ந்து பொல்லாதவன், கிரி, வாரணம் ஆயிரம் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார்.
தற்போது, சினிமாவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தார். 2013ஆம் ஆண்டு கர்நாடகாவின் மாண்டியா தொகுதியில் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார்.
சமீபத்தில், ஷாருக்கான் நடித்த பதான் படத்திலிருந்து வெளியான பாடலில் தீபிகா படுகோன் காவி நிற ஆடை அணிந்திருந்ததால் பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு திவ்யா, “சமந்தா தனது விவாகரத்துக்காகவும், சாய்பல்லவி தனது கருத்தை கூறியதற்காகவும் ராஷ்மிகாவின் தனித்துவத்திற்காகவும் தீபிகா தனது ஆடைக்காகவும் மற்றும் சில பெண்கள் இப்படியாக பல காரணங்களுக்காக கேலி கிண்டலுக்கு உள்ளாகுகிறார்கள். எதைப் பேச வேண்டும், எதை செய்ய வேண்டும் என தீர்மானிப்பது எங்களது அடிப்படை சுதந்திரம். பெண்கள் கடவுள் துர்கா தேவியின் உருவங்கள். பெண் வெறுப்பு எனும் தீமைக்கு எதிராக போராட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
இதையும் படிக்க: பூங்குழலியின் பிறந்தநாள்! - புகைப்படங்கள்
இந்நிலையில், இன்று திவ்யா ஸ்பந்தனா மாரடைப்பால் காலமானார் என்கிற வதந்தி சமூக வலைதளங்களில் தீவிரமாகப் பரவியது. இதனையடுத்து திவ்யா, தான் நலமாக இருப்பதாக அவர் தோழியின் வாயிலாக தெரிவித்துள்ளார். ஆனால், இந்த வதந்தியால் இந்திய அளவில் திவ்யா டிரெண்ட் ஆனதுடன் அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், “தற்போது ஜெனீவாவில் நலமுடன் இருக்கிறேன் எனவும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என இதுகுறித்து திவ்யா ஸ்பந்தனா விளக்கமளித்துள்ளார்.