ரூ.100 கோடியை நெருங்கும் ஆடு ஜீவிதம் வசூல்!
ஆடு ஜீவிதம் படத்தின் வசூல் ரூ.100 கோடியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மலையாளத்தில் மிகவும் புகழ்பெற்ற ஆடு ஜீவிதம் நாவல் (தி கோட் லைஃப்) அதே பெயரில் திரைபடமாக எடுக்கப்பட்டுள்ளது. நாயகனாக பிருத்விராஜும், நாயகியாக அமலா பாலும் நடித்துள்ளனர்.
பிளெஸ்ஸி ஐப் தாமஸ் இந்தப் படத்தினை இயக்கியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக இப்படத்தின் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், மார்ச் 28 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், நடிகர் பிருத்விராஜின் நடிப்பும் படத்தின் உருவாக்கமும் பாராட்டுக்களைப் பெற்று வருகின்றன.
உலகளவில் முதல்நாளில் ரூ.16 கோடி வசூலித்த இப்படம், உலகம் முழுவதும் சேர்த்து ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக படக்குழு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், ஆடு ஜீவிதம் திரைப்படம் வெளியாகி நேற்றோடு 8 நாள்கள் ஆன நிலையில், இந்தியா முழுவதும் நேற்று மட்டும் ரூ. 3.25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் இந்தியளவில் மட்டும் இதுவரை ரூ. 47 கோடி வரை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றுடன் ரூ. 50 கோடியை தாண்டும் என்றும், வார இறுதி நாள்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவில் இப்படம் வசூல் செய்யும் என்றும் கூறப்படுகிறது.
உலக அளவில் ஆடு ஜீவிதம் திரைப்படம் 2-வது வார இறுதியில் ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.