குடும்பம்தான் குற்றவாளிகளை உருவாக்குகிறது: இயக்குநர் ஜியோ பேபி
காதல் தி கோர் படத்தின் இயக்குநர் ஜியோ பேபி தனது சினிமா அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.
‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படத்தின் மூலம் கவனம்பெற்ற மலையாள இயக்குநர் ஜியோ பேபி, அடுத்ததாக நடிகர் மம்மூட்டி, நடிகை ஜோதிகா ஆகியோரை மையக் கதாபாத்திரமாக வைத்து ‘காதல் தி கோர்' என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் உருவான இப்படம் கடந்த நவ.23 ஆம் தேதி வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் மம்மூட்டி, முதன் முறையாக தன்பாலின ஈர்ப்பாளராக நடித்திருப்பது உச்ச நட்சத்திரங்கள், ரசிகர்கள் உள்பட பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இயக்குநர் பா.ரஞ்சித் நடத்திவரும் பி.கே.ரோஸி திரைப்பட விழாவில் நேற்று (ஏப்.10) மாலை கலந்து கொண்ட இயக்குநர் ஜியோ பேபி பேசியதாவது:
Advertisement
Advertisement
கேரளத்தில் பிறந்த பி.கே.ரோஸியின் பெயரில் சென்னையில் விழா நடத்துவது மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுக்கு எனது மரியாதைகள். எனது படங்கள் அனைத்தும் குடும்பத்தில் இருந்தே அமைய காரணம் குடும்பம்தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பமாக இருக்கிறது. குடும்பம்தான் குற்றவாளிகளை உண்டாக்குகிறது. குடும்ப அமைப்பே வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் அதன் அமைப்புகளை, படிநிலைகளை மாற்ற வேண்டும்.
தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு சமூகத்தில் போதுமான அங்கீகாரம் கிடைக்கவில்லை. நாம் அதற்காக போராட வேண்டும். பெண்களுக்கும் போதுமான அளவு மரியாதைகள் கிடைப்பதில்லை. நாம் நமது குடும்பத்தில் இருக்கும் பிரச்னைகளை சரி செய்தாலே பாதி பிரச்னைகள் ஒழிந்து விடும். நான் எனது 35 வயதில்தான் பெண்கள் அதிகமாக அடுப்பங்கறையில் சுரண்டப்படுகிறார்கள் என்பதையே உணர்ந்தேன்.
முதலில் தி கிரேட் இந்தியன் கிட்சன் படத்தை யாரும் வாங்க முன்வரவில்லை. பின்னர் சமூக ஊடங்களில் நல்ல விமர்சனம் பெறவே பிரபல ஓடிடி நிறுவனங்கள் என்னை அழைத்தன எனக் கூறினார்.