‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?
பிவிஆர் திரையரங்குகளில் விளம்பரங்கள் குறைப்பு: வருவாய் அதிகரிக்குமா?
இந்தியா முழுவதும் பல திரையரங்குகளைக் கொண்டுள்ள பிவிஆர்- ஐநாக்ஸ் நிறுவனம் குறைந்துவரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
விளம்பரங்கள் இல்லாமல் திரைப்படங்களை திரையிடவுள்ளது பிவிஆர். பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறைந்துள்ளதும் சமீபத்தில் ஹிந்தி படங்கள் எதுவும் பெரியளவிலான வசூல் ஈட்டாததும் திரையரங்க வணிகத்தைப் பாதித்துள்ளது.
படம் திரையிடுவதற்கு முன்பு 35 நிமிடங்களுக்கு ஒளிபரப்பாகும் விளம்பர நேரத்தை 10 நிமிடங்களாக குறைக்க திட்டமிட்டுள்ளது பிவிஆர்.
இது குறித்து பிவிஆர் நிறுவனத்தின் லக்சுவரி கலெக்ஷன் பிரிவுத் தலைவர் ரெனாட் பாலியர், “விளம்பரங்கள் குறைக்கப்படுவது நேரத்தை மிச்சப்படுத்தி கூடுதல் காட்சிகள் திரையிட உதவும். கூடுதல் காட்சிகள் வழி பார்வையாளர்கள் எண்ணிக்கை கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.
பட இடைவெளிகளில்கூட விளம்பரங்கள் இருக்காது எனவும் வரவிருக்கும் படங்களின் டிரைலர்கள் மட்டுமே திரையிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பு, கூடுதல் காட்சிகள் மூலம் ஈட்டப்படும் வருவாய் கொண்டு ஈடு செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
மூன்றாவது காலாண்டில் நிறுவனம் 23 சதவிகிதம் கூடுதல் விளம்பர வருவாய் காட்டியிருந்தாலும் 2024 நிதியாண்டின் மார்ச் காலாண்டில் 15 சதவிகித விளம்பர வருவாய் இழப்பு இருக்கும் என வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
பெப்சி மற்றும் கோக் போன்ற சில நிறுவனங்களின் விளம்பரம் மட்டும் இடம்பெறும் எனத் தெரிகிறது.
பிவிஆர் நாடு முழுவதும் 1,741 திரைகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.