கன்னட படங்களை எந்த ஓடிடியும் வாங்குவதில்லை..! ரிஷப் ஷெட்டி வேதனை!
காந்தாரா படத்தின் இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி கன்னட படங்களை எந்த ஓடிடியும் வாங்குவதில்லை எனக் கூறியுள்ளார்.
கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிக்கும் கதையே இப்படம்.
கன்னட வரவேற்பை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ரிஷப் ஷெட்டிக்கு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. சிறந்த பொழுதுபோக்கு திரைப்படத்துக்கும் விருது கிடைத்தது.
Advertisement
Advertisement
தற்போது இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய விருது வென்ற பிறகு கன்னட படங்களை ஓடிடியில் வெளியிடுவதில் இருக்கும் சிக்கல்களை குறித்து பேசியுள்ளார். அதில் ரிஷப் ஷெட்டி பேசியதாவது:
கன்னட திரைப்படங்கள் பல்வேறு திரைப்பட விழாக்களில் பங்கேற்கின்றன, விருதுகள் பெறுகின்றன. ஆனால் எங்கள் படங்களை எந்த ஓடிடி நிறுவனங்களும் வாங்குவதில்லை. அதனால் யூடியூப்பில் பதிவிடும் அவலத்துக்கு தள்ளப்படுகிறோம். இனிமேல் இந்த மாதிரி படங்களை எடுக்கமுடியுமென தோன்றவில்லை.
இரண்டு படங்களை தயாரித்து வருகிறேன். திரைப்படங்கள்தான் எனக்கு எல்லாமே கொடுத்தது. வருங்காலத்தில் இது எப்படி போகுமென தெரியவில்லை.
எனக்கு தேசிய விருது கிடைத்ததற்கு மிகவும் கௌரமாக உணர்கிறேன். காந்தாரா படத்தில் நான் என்னுடைய வேலையை செய்தேன். ஆனால் அதில் பணியாற்றிய அனைவருக்கும் இது சொந்தமானது. எனது படத்தில் வேலை செய்த தொழில்நுட்ப குழுவின் சார்பாக மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.