முடிந்தது வித்யா நம்பர் 1 சீரியல்!
நம்பர் ஒன் கோடாலு என்ற பெயரில் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த வித்யா நம்பர் 1 என்ற தொடர் முடிவுற்றது. 2021 முதல் ஒளிபரப்பான வித்யா நம்பர் 1 தொடர், 650 எபிஸோடுகள் ஒளிபரப்பானது.
இறுதி நாள் படப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சமீபத்தில் நடிகர்கள் தங்களின் சமூக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், நேற்று இந்தத் தொடரின் இறுதிக்காட்சி ஒளிபரப்பானது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10.30 மணிக்கு வித்யா நம்பர் 1 தொடர் ஒளிபரப்பாகி வந்தது.
இந்தத் தொடரில் நடிகை தேஜஸ்வினி கெளடா நாயகியாகவும், புவியரசு நாயகனாகவும் நடித்தனர். நடிகை நிஹாரிகா, இளவரசன், ஸ்வேதா, அழகு ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.
கல்விக்கு முக்கியத்துடன் கொடுக்கும் தொழிலதிபரான மாமியாருக்கு கல்வி கற்காத பெண் மருமகளாக வரும் சூழல் ஏற்படுகிறது. மாமியாரிடம் நல்ல பேரை வாங்குவதற்காக மனைவியை கல்வி கற்க வைக்கிறார் கணவர். இவர்களுக்கு இடையிலான கதையே வித்யா நம்பர் 1 என்ற தொடர்.
நம்பர் ஒன் கோடாலு என்ற பெயரில் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற இந்த தொடர், 2021 முதல் வித்யா நம்பர் 1 என்ற பெயரில் தமிழில் ஒளிபரப்பாகி வந்தது.
அனைத்துத் தரப்பு மக்களையும் கவர்ந்த இந்தத் தொடர், வெற்றிகரமாக 650 எபிஸோடுகள் ஒளிபரப்பானது. நேற்று இந்தத் தொடரில் கடைசிக்காட்சி ஒளிபரப்பானது. தெலுங்கில் அடைந்ததைப் போலவே தமிழிலும் வித்யா நம்பர் 1 தொடர் மற்றும் அதன் நடிகர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.