விஷாலின் ரத்னம் படப்பிடிப்பு நிறைவு!
விஷால் நடிப்பில் உருவாகி வரும் ரத்னம் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘மார்க் ஆண்டனி’ வெற்றியைத் தொடர்ந்து விஷால் ஒப்பந்தமான படம் ரத்னம். இந்த படத்தை ஹரி இயக்கி வருகிறார். தாமிரபரணி, பூஜை படங்களுக்கு பிறகு இருவரும் இணையும் மூன்றாவது படம் இது. இதில் விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்துக்கு தேவி பிரசாத் இசையமைக்க சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தை ஜீ ஸ்டூடியோஸ் சவுத் மற்றும் கார்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இதையும் படிக்க: அயலான் - 2!
இயக்குநர் ஹரிக்கே உரிதான ஆக்ஷன் பாணியில் படம் உருவாகி வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது. இதுகுறித்து தெரிவித்த விஷால், “ரத்னம் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. இயக்குநர் ஹரியுடன் மூன்றாவது முறையாக இணைந்தது மகிழ்ச்சி. தூத்துக்குடி, திருச்சி, காரைக்குடி, வேலூர், திருப்பதி, சென்னையில் நடைபெற்ற இப்படப்பிடிப்பு நல்ல நினைவாக இருக்கும். கார்த்திக் மற்றும் ஸ்டோன்பென்ச்க்கு நன்றி.” எனக் குறிப்பிட்டதுடன் இப்படம் மே மாதம் திரைக்கு வரும் என்பதையும் அறிவித்துள்ளார்.