மலையாளத்தில் சிறந்த கதைக்களங்களில் திரைப்படங்களை உருவாக்கி கவனம் பெற்றவர் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிஸரி. இவரது ஜல்லிக்கட்டு படம் இந்தியாவின் சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இறுதியாக வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படமும் விமர்சன ரீதியில் பாராட்டுக்களைப் பெற்றது.
தற்போது, நடிகர் மோகன் லாலை வைத்து ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார். தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுநீலகண்டன் ஒளிப்பதிவு செய்ய பிரசாந்த் பிள்ளை இசையமைத்திருக்கும் இப்படம் வியாழக்கிழமை வெளியானது.
போர்த்துகீசியர்கள் காலகட்டம், ஒளிப்பதிவு என காட்சிகள் பிரமிப்பைத் தருகின்றன. ஆனால், படத்தின் கதையால் மலைக்கோட்டை வாலிபன் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இந்நிலையில், இப்படம் உலகளவில் முதல்நாள் வசூலாக ரூ.12.5 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மோகன் லால் நடிப்பில் வெளியான படங்களிலேயே கேரளத்தில் அதிக முதல்நாள் வசூலை ஈட்டிய படங்களில் ஒன்றாகவும் மலைக்கோட்டை வாலிபன் இடம்பிடித்திருக்கிறது.