திரை வாழ்வின் மைல்கல்... அன்னா பென் நெகிழ்ச்சி!
கல்கி திரைப்படத்தின் அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார் நடிகை அன்னா பென்.
கும்பளங்கி நைட்ஸ், கப்பெல்லா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அன்னா பென். இவர் நடிப்பில் வெளியான ‘ஹென்னா’ திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படம் தமிழில் அன்பிற்கினியாள் என்கிற பெயரில் ரீமேக்கும் செய்யப்பட்டது.
தொடர்ந்து, கொட்டுக்காளி படத்தில் நாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார். இப்படம், விரைவில் வெளியாக உள்ளது.
சமீபத்தில் வெளியான கல்கி திரைப்படத்தில் கைரா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சில காட்சிகளிலேயே வந்தாலும் அவருக்கு இந்தியளவில் கவனம் கிடைத்துள்ளது. படமும் ரூ.800 கோடி வரை வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், கல்கி திரைப்படத்தின் அனுபவங்களைக் குறித்து பதிவொன்றை அன்னா வெளியிட்டுள்ளார்.
அதில், “என்னைத் தேடி 2 ஆண்டுகளுக்கு முன் கைரா கதாபாத்திரம் வந்தபோது இந்த வாய்ப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டேன். இது, என் திரைவாழ்வில் மைல்கல்லாக இருக்கும் என்பதையும் அறிந்திருந்தேன். அனைத்து நன்றிகளும் இயக்குநர் நாக் அஸ்வினுக்குத்தான். மிகச் சாதாரணமாக இந்தியாவின் பிரம்மாண்ட படமொன்றை இயக்கிவிட்டார்.
இந்திய சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களுக்கு இடையே என்னையும் தேர்ந்தெடுத்தார். இந்தப் பயணத்தில் இருந்ததற்காக நான் ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். கைரா எனக்களித்த இடத்தைத் தக்க வைக்க தொடர்ந்து கடினமாக உழைப்பேன். நிறைய சொல்ல வேண்டும் ஆனால் இப்போது திகைப்பில் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.