மலர் டீச்சராக நடித்திருக்க வேண்டிய நடிகை இவரா?
பிரேமம் படத்தில் சாய் பல்லவி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வான நடிகை பற்றி அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார்.
‘நேரம்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். 2015-ல் அவர் இயக்கத்தில் வெளியான மலையாள படமான 'பிரேமம்' கேரளம் மற்றும் தமிழகத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
சென்னையிலேயே இப்படம் 200 நாள்கள் ஓடி மலையாள சினிமாவிற்கு புதிய வணிகக் கதவுகளைத் திறந்துவிட்டது. இப்படத்தின் வருகைக்குப் பின்பே பலரும் மலையாள சினிமாவைப் பார்க்கத் துவங்கினர்.
Advertisement
இதில் நாயகனாக நடித்த நிவின் பாலி, நாயகிகளாக அறிமுகமான சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் இன்றும் முக்கிய நடிகர்களாகவே உள்ளனர்.
குறிப்பாக, பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி பலரின் விருப்பமான கதாநாயகியாகவே மாறினார். இன்றும், மலர் டீச்சரை திரையில் பார்த்தால் பரவசம் அடையாத ரசிகர்கள் இருப்பார்களா என்பதில் சந்தேகம்தான்.
தற்போது, இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், “பிரேமம் படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரம் மட்டஞ்சேரியைச் சேர்ந்தவராக எழுதினேன். அதற்காக, முதலில் நடிகை அசினை நடிக்க வைக்கவே முயற்சி செய்தோம். ஆனால், மலர் தமிழராக மாறியபின் சாய் பல்லவியைத் தேர்ந்தெடுத்தோம்” எனக் கூறியுள்ளார்.
ஒருவேளை இப்படத்தில் அசின் இணைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கலாம். ஆனால், சாய் பல்லவி அளவுக்கு ஈர்த்திருக்க முடியாது என்பதே ரசிகர்களின் கருத்தாகவும் உள்ளது.