மீண்டும் அரசியலுக்கு வரும் சிரஞ்சீவி?
நடிகர் சிரஞ்சீவி மீண்டும் அரசியலுக்கு வரத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கின் சூப்பர் ஸ்டார் நடிகரான சிரஞ்சீவி கடந்த 2008 ஆம் ஆண்டு பிரஜா ராஜ்யம் என்கிற கட்சியைத் தொடங்கினார். நட்சத்திர வெளிச்சத்துடன் அதிரடியாக அரசியலுக்குள் இறங்கினாலும் 2009 ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு 18 இடங்களை மட்டுமே பெற்றார்.
ஆனால், அவர் போட்டியிட்ட திருப்பதி தொகுதியில் வென்று சட்டப்பேரவை உறுப்பினரானார். தொடர்ந்து, கட்சியில் ஏற்பட்ட குழப்பம் மற்றும் அழுத்தங்களால் தன் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார்.
அதன்பின், காங்கிரஸ் வேட்பாளாராக மத்தியமைச்சராகவும் ஆனார். ஆனால், 2014 ஆம் ஆண்டில் ஆந்திராவில் ஏற்பட்ட மாநிலப் பிரிவினை பிரச்னையில் சிரஞ்சீவியின் பெயர் கடுமையாக அடிபட்டது. இதனால், பிரஜா ராஜ்யம் கட்சியின் இளைஞரணி தலைவரும் சிரஞ்சீவியின் தம்பியுமான நடிகர் பவன் கல்யாண், ஜனசேனா என்கிற புதிய கட்சியைத் தொடங்கினார்.
இந்தக் குழப்பங்களால் அரசியலிலிருந்து விலகிய சிரஞ்சீவி திரைப்படங்களில் நடிக்கத் துவங்கினார்.
இந்த நிலையில், நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி வைத்து ஜனசேனா போட்டியிட்ட 21 இடங்களிலும் வெற்றி பெற்றதுடன் ஆந்திரத்தின் துணை முதல்வராகவும் பதவியேற்றார்.
இந்த வெற்றியைக் கருத்தில் கொண்டு, நடிகர் சிரஞ்சீவி மீண்டும் அரசியலுக்கு வந்து ஜனசேனா கட்சியில் இணைந்து முக்கிய பொறுப்பை ஏற்க உள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.