தங்களைக் கடவுளின் படைப்பு என நினைப்பவர்களுக்கு சிகிச்சை தேவை: பாடகர் ஸ்ரீனிவாஸ்!
தங்களைக் கடவுளின் படைப்பு என நினைப்பவர்களுக்கு சிகிச்சை தேவை என பாடகர் ஸ்ரீனிவாஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீனிவாஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். நம்மவர் படத்தில் மகேஷ் இசையமைப்பில் ”சொர்கம் என்பது நமக்கு” பாடல் இவருக்கு முதல் பாடலாக அமைந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மின்சாரக் கனவு படத்தில், ‘மானா மதுரை‘ என்னும் பாடல் மூலம் பிரபலமானார். தற்போது வரை 3000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்நிலையில் பாடகர் ஸ்ரீனிவாஸ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ”யாராவது தன்னை கடவுளின் சிறந்த படைப்பு என நினைத்தால், அவர்களின் நோய்க்கு சிகிச்சை உதவி தேவைப்படுகிறது. மனிதநேயத்தை தவிர வேறேதும் முக்கியமோ அல்லது சிறப்பு வாய்ந்ததோ கிடையாது. நான் இங்கு ஒருவரை மட்டும் குறிப்பிடவில்லை. தங்களின் துறைகளில் வெற்றிகரமாக இருக்கும் பலருக்கும் இந்த நோய் உள்ளது. அவர்களைச் சந்தித்து உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்” என பதிவிட்டுள்ளார்.
பெயர் குறிப்பிடாமல் இருந்தாலும் இவர் பிரதமர் மோடியைத்தான் விமர்சித்துள்ளார் என்றும் இசையமைப்பாளர் இளையராஜாவை விமர்சித்துள்ளார் என்றும் பலர் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். பாடகர் ஸ்ரீனிவாசின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.