என்ஜாய் எஞ்சாமி பிரச்னை! பாடகர் அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் சவால்!
என்ஜாய் எஞ்சாமி பாடல் விவகாரத்தில் ஆதாரங்களுடன் விவாதிக்குமாறு பாடகர் அறிவுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சவால்
என்ஜாய் எஞ்சாமி பாடல் விவகாரத்தில் ஆதாரங்களுடன் விவாதிக்குமாறு பாடகர் அறிவுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சவால் விடுத்துள்ளார்.
கடந்த 2021-ல் பாடகரும் பாடலாசிரியருமான அறிவு மற்றும் பாடகி தீ-யும் இணைந்து என்ஜாய் எஞ்சாமி என்ற பாடலைப் பாடினர். இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். நீண்டகாலத்துக்குப் பிறகு வரவேற்பைப் பெற்ற தனியிசைப் பாடலாக என்ஜாய் என்சாமி பாடல் அமைந்தது.
இதனிடையே, அறிவுக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே பாடலுக்கான காப்பீட்டு உரிமைப் பிரச்னை ஏற்பட்டது. இருவருக்கும் ஆதரவாக இருதரப்பில் இருந்தும் பலர் குரல் எழுப்பினர்.
இந்த நிலையில், பாடல் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவானதாக அறிவு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இதுவரையில் காப்பீட்டு உரிமைப் பிரச்னையில் தனக்கான நியாயம் கிடைக்கவில்லை என்றும் அறிவு தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, தன்னிச்சையாக பணிபுரிபவர்கள் (Independent artists) எப்போதும் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும், தங்களின் உரிமைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவு அறிவுறுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, ஆதாரங்களுடன் எந்த செய்தி அல்லது ஊடகங்களிலும் விவாதிக்கத் தயாரா என்று அறிவுக்கு சந்தோஷ் நாராயணன் சவால் விடுத்துள்ளார்.