கூடுதல் திரைகளில் சட்டம் என் கையில்..! சதீஷ் நெகிழ்ச்சி!
சட்டம் என் கையில் படம் கூடுதல் திரைகளில் திரையிடப்படுவதற்கு நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் சதீஷ்.
எதிர் நீச்சல் படத்தில் நடிகர் சதீஷின் நகைச்சுவை மிகவும் கவனம் பெற்றது. பிறகு கத்தி, மான் கராத்தே, ஆம்பள ஆகிய படங்களில் இவரது நகைச்சுவை பெரிதும் பாராட்டப்பட்டன.
நகைச்சுவை நடிகரான சதீஷ் கதாநாயகனாக நடித்த நாய்சேகர், ஓ மை கோஸ்ட் திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன.
வித்தைக்காரன், கான்ஜூரிங் கண்ணப்பன் ஆகிய படங்களும் கமர்ஷியல் வெற்றி பெற்றன.
தற்போது, சட்டம் என் கையில் படம் செப்.27ஆம் தேதி வெளியானது.
இந்தப் படத்தை இயக்குநர் சச்சி இயக்கினார். இதில் வித்யா பிரதீப் நாயகியாக நடித்துள்ளார். மைம் கோபி, பவா செல்லதுரை, பாவேல் நவகீதன் நடித்துள்ளார்கள்.
இப்படத்தினை பரத்வாஜ் முரளிகிருஷ்ணன், ஸ்ரீராம் சத்தியநாராயணன், கோகுல கிருஷ்ணன் ஷண்முகம் இணைந்து தயாரிக்க, இசையமைப்பாளர் எம்.எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ளார்.
படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் கூடுதல் திரைகளில் திரையிடப்பட்டுளதற்கு மகிழ்ச்சி தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் சதீஷ்.
அந்த விடியோவில், “சட்டம் என் கையில் கடைசி வாரம் வெளியாகி சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளங்களுக்கும் பொது மக்களுக்கும் மிக்க நன்றி. ஏனென்றால், நீங்கள் கொடுத்த விமர்சனங்கள் படத்துக்கு மிகப்பெரிய வெற்றிக்கு உதவியது.
நல்ல விமர்சனங்களால் இந்த வாரம் கூடுதல் திரையரங்குகளில், திரைகளில் சட்டம் என் கையில் வெளியாகிறது. படம் பார்க்காதவர்கள் சென்று பாருங்கள். பார்த்தவர்களும் பிடித்திருந்தால் மீண்டும் சென்று பாருங்கள்.
நல்ல படம் கொடுத்தோம் என்ற நம்பிக்கையில் உள்ளோம். நல்ல படங்களுக்கு எப்போதும் உங்களது ஆதரவு இருக்கிறது. சட்டம் என் கையில் இனிமேல் உங்கள் கையில், நன்றி என்றார்.