விஜய் படம் கைவிடப்பட்டது ஏன்? பதிலளித்த இயக்குநர் சசிகுமார்!
இயக்குநர் சசிகுமார் நடிகர் விஜய்யிடம் கதை கூறியது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார்.
சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சசிகுமார். இன்றும் விமர்சகர்கள், ரசிகர்கள் மத்தியில் இத்திரைப்படம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது.
சுப்ரமணியபுரத்துக்குப் பின் ’ஈசன்’ படத்தை இயக்கிய சசிகுமார் அதன்பின் நடிப்பதில் கவனம் செலுத்தினார்.
வெற்றி, தோல்வியென சென்ற அவர் நடிப்பு வாழ்க்கையில் இறுதியாக வெளியான ‘அயோத்தி’ ’கருடன்’ ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன.
Advertisement
நந்தன் புரமோஷன்
இரா.சரவணன் இயக்கத்தில் சசிகுமார் நடித்த ‘நந்தன்’ திரைப்படம் செப்.20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இரா என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். சுருதி பெரியசாமி நாயகியாக நடித்துள்ளார்.
இதற்கான புரமோஷன் பணிகளில் சசிகுமார் பங்கேற்று வருகிறார். நடிகர் விஜய்யுடனான படம் குறித்து பேசியுள்ளார்.
விஜய் படம் கைவிடப்பட்டது ஏன்
இந்நிலையில் இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குநர் சசிகுமார் கூறியதாவது:
ஈசன் படத்துக்குப் பிறகு நான் தளபதி விஜய்யிடம் கதை கூறினேன். 2015இல் இருக்கும். அது ஒரு வரலாற்று சம்பந்தப்பட்ட கதை. விஜய்யிக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. அவரே தயாரிப்பாளரையும் காட்டினார். ஆனால், அந்த நேரத்தில் அதன் பட்ஜெட், விஎஃப்எக்ஸ் எல்லாம் மிகவும் செலவுமிகுந்ததாக இருந்தது. அதனால் அந்தப் படம் கைவிடப்பட்டது.
அடுத்த ஒரு படத்தோடு விஜய் ஓய்வு பெறக்கூடாது என நினைக்கிறேன். அரசியலில் இருந்தும் அடிக்கடி படம் நடிக்கலாம். விஜய் ஓய்வு பெறமாட்டார் என நான் நினைக்கிறேன் என்றார்.