ரௌடியாக நடிக்கும் சண்முக பாண்டியன்!
பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடித்து வருகிறார்.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் நடிகர் சண்முக பாண்டியன் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இயக்குநர் பொன்ராம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களை இயக்கி வெற்றி பெற்றவர். ஆனால், இறுதியாக இயக்கிய டிஎஸ்பி திரைப்படம் பெரிய தோல்விப்படமானது.
இதனால், பொன்ராம் படத்தில் நடிக்க பெரிய நடிகர்கள் தயங்கினர்.
Advertisement
இந்த நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியனை நாயகனாக வைத்து புதிய படத்தை பொன்ராம் இயக்கி வருகிறார். படத்தின் படப்பிடிப்பு உசிலம்பட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நகைச்சுவை கலந்த இக்கதையில், ரௌடியாக சண்முக பாண்டியன் நடித்து வருகிறாராம். நாயகியாக, தார்னிகா என்பவர் நடிக்கிறார். இவர் நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கிராமப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கிறார். விஜயகாந்த்துடன் நடிகர் சரத்குமார் இணைந்து நடித்த புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட படங்கள் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.