சீக்கியர்கள் துப்பாக்கியால் சுடும் காட்சியை நீக்குங்கள்! தொடரும் எமர்ஜென்சி தணிக்கை பிரச்னை!
எமர்ஜென்சி திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ்...
எமர்ஜென்சி படத்திற்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதில் நடிகை கங்கனா தீவிரம் காட்டி வருகிறார்.
நடிகையும் எம்.பி.யுமான கங்கனா ரணாவத் இயக்கத்தில் உருவான எமர்ஜென்சி திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் இன்னும் சான்றிதழ் கொடுக்கவில்லை.
நீண்ட நாள்களாக இப்படம் தயாரிப்பிலிருப்பதால் விரைவில் திரைக்குக் கொண்டு வர வேண்டும் என கங்கனாவுடன் இணை தயாரிப்பில் ஈடுபட்ட ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் தணிக்கை வாரியத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தது.
Advertisement
இந்த வழக்கு விசாரணையில் தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், “எமர்ஜென்சி படத்தில் இடம்பெற்ற காட்சிகளிலுள்ள 13 இடங்களில் திருத்தம் செய்யும்படி கேட்டிருக்கிறோம். அதில், 4 இடங்களில் வெட்டும்படியும், 3 இடங்களில் திருத்தம் செய்யும்படியும், 6 இடங்களில் புதிதாக சேர்க்கும்படியும் தெரிவித்திருந்தோம்.
முக்கியமாக, சீக்கியர்கள் அல்லாதவர்களை சீக்கியர்கள் துப்பாக்கியால் சுடும் காட்சியை அகற்ற சொல்லியிருக்கிறோம். ஆனால், படக்குழுவினர் அதைச் செய்யவில்லை. இதைச்செய்தால், எமர்ஜென்சி படத்திற்கு யு.ஏ. சான்று வழங்கப்படும்.” எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து பேட்டியொன்றில் பேசிய கங்கனா, “எமர்ஜென்சி படத்தி்ன் காட்சிகள் அனைத்தும் முக்கியமானவை. உண்மைக்குப் புறம்பானவை என எதுவும் இல்லை. தணிக்கை வாரியம் திருத்தச் சொல்லும் விஷயங்கள் நியாயமற்றதாக இருக்கிறது. வரலாற்று ஆய்வாளர்கள் படத்தைப் பார்த்து பாராட்டியுள்ளனர். மேலும், உண்மைத்தன்மையிலிருந்து படம் ஒரு சதவீதம் கூட விலகவில்லை. இப்படத்திற்கு நாங்கள் போராடத் தயாராக இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
சீக்கியர்கள் குறித்து வன்முறைக் காட்சிகள் உள்ளதை தணிக்கை வாரியம் தெரியப்படுத்தியுள்ளதால், எமர்ஜென்சி வெளியாவதற்கு முன் பல சிக்கல்களைச் சந்திக்கும் என்றே தெரிகிறது.