முகப்பு
செய்திகள்

’கெஞ்சிக் கேட்கிறேன்..’ மணிரத்னத்துக்கு அசத்தலாக பதிலளித்த ஷாருக்கான்!

இயக்குநர் மணிரத்னம் படத்தில் நடிப்பது குறித்து சுவாரஸ்யமாக பதிலளித்துள்ளார் நடிகர் ஷாருக்கான்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:21 PM
பகிர்:

இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனம் ஒன்று, 2023 ஆம் ஆண்டிற்கான இந்தியன் விருதுகளை (இந்தியன் ஆஃப் தி இயர் 2023) வழங்கியது. இதற்கான, விருது வழங்கும் நிகழ்வு நேற்று மும்பையில் நடைபெற்றது. அதில்,  நடிகர் ஷாருக்கானுக்கும் இந்தியன் ஆஃப் தி இயர் 2023 விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் பாலிவுட் நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர். இயக்குநர் மணிரத்னமும் தன் மனைவி சுஹாசினியுடன் பங்கேற்றார். 

அப்போது, விருதைப் பெற்ற ஷாருக்கான் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினார்.

பின், கேள்வி பதிலுக்கான நேரத்தில் நெறியாளர், “ இயக்குநர் மணிரத்னம் இங்கு இருக்கிறார். 30 ஆண்டுகளுக்கு முன் அவருடன் பணியாற்றினீர்கள். மீண்டும் எப்போது இருவரும் இணைவீர்கள்?” எனக் கேட்டார்.

உயிரே படப்பிடிப்பில்..!

அதற்கு ஷாருக்கான், “மணி சார் என்ன சொல்வது? இது பொதுவெளிக்கு வந்துவிட்டது. நான் உங்களைச் சந்திக்கும்போதெல்லாம் என்னை வைத்து திரைப்படம் எடுங்கள் எனக் கூறியிருக்கிறேன். இப்போதும் கோரிக்கை வைக்கிறேன், கெஞ்சியும் கேட்கிறேன். நீங்கள் சரி என்றால், ரயிலில் என்ன?  கண்டிப்பாக, இந்த முறை விமானத்தில் கூட ‘சய்ய.. சய்யா’ (தக்க தைய தைய தையா தையா) பாடலுக்கு நடனமாடுவேன்” என பதிலளித்தார்.

உடனே,  மணிரத்னம், “நீங்கள் எப்போது விமானம் வாங்குகிறீர்களோ, அப்போது உங்களை இயக்கலாம்” எனக் கூறினார். மேடையில் நின்று இதைக் கேட்டுக்கொண்டிருந்த ஷாருக்கான், “மணி.. என் படங்கள் இப்போது எப்படி சென்று கொண்டிருக்கின்றன(வசூலில்) எனத் தெரியுமா?” என்றதுடன் “விமானம் வாங்கும் நிலை தொலைவில் இல்லை. ஐயம் கம்மிங் (iam coming)” என சுவாரஸ்யமாக பதிலளித்தார். இந்த பதிலால் அரங்கிலிருந்தவர்கள் சிரித்து, கைதட்டி மகிழ்ந்தனர்.

ஷாருக்கான் நடிப்பில்  வெளியான பதான் மற்றும் ஜவான் திரைப்படங்கள் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலித்து ஆச்சரியப்படுத்தின. சமீபத்தில் வெளியான ‘டன்கி’ படமும் ரூ.400 கோடி வசூலித்ததால் இந்தியாவின் வசூல் மன்னனாக மாறியிருக்கிறார் ஷாருக்!  

முழு கட்டுரையைப் படிக்க →