எம்புரான் படத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
எம்புரான் படத்திற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது.
மோகன்லால் நடித்த எம்புரான் படத்திற்குத் இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய மனு மீதான விசாரணையில் கேரள உயர்நீதிமன்றம் மனுவை ரத்து செய்து உத்தரவிட்டது.
மோகன்லால் - பிருத்விராஜ்ஜின் கூட்டணியில் உருவான எம்புரான் திரைப்படம் மார்ச் 27 அன்று திரையரங்குகளில் வெளியானது. லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
படத்தில் குஜராத் மதக்கலவரத்தைப் போல ஒரு காட்சி இடம்பெற்றிருந்தது. இது, வலதுசாரி அமைப்புகளிடையே விமர்சனங்களை ஏற்படுத்தியது.
Advertisement
இதனால், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவதாக நடிகர் மோகன்லால் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, எம்புரான் படத்த்திற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி கேரள பாஜகவைச் சேர்ந்த விவி விஜேஷ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.
அந்த மனுவில், “எம்புரான் படத்தில் 2002 குஜராத் கலவரம் பற்றிய காட்சிகள் உள்ளன. பாதுகாப்பு அமைச்சகத்தைப் பற்றி தவறான கருத்துகள் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தும் வகையில் காட்சிகளை சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் வகுப்புவாத கலவரத்தைத் தூண்டும். எனவே அதுபோன்ற கலவரம் ஏற்படுவதைத் தவிர்க்க எம்புரான் படத்திற்கு தடை விதிக்கவேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சிஎஸ் தியஸ், எம்புரான் திரைப்படம் வகுப்புவாதக் கலவரத்தைத் தூண்டும் விதமாக உள்ளதா என்றும், பாஜக உறுப்பினரின் மனுவின் மீதான நிலைப்பாட்டைத் தெரிவிக்குமாறும் மத்திய அரசு மற்றும் தணிக்கை வாரியத்திற்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டார்.
மேலும், ”மனுதாரர் விளம்பர நோக்கத்திற்காக இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக சந்தேகம் எழுகின்றது. தணிக்கை வாரியம் அனுமதி கொடுத்து மக்களின் பார்வைக்கு வந்த படத்தின் மீது உங்களுக்கு என்ன பிரச்னை?” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
பின்னர், எம்புரான் படத்திற்கு இடைக்காலத் தடை விதிப்பதற்கு மறுப்பு தெரிவித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில், படத்திலிருந்து மேலும் 2 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த தயாரிப்பு நிறுவனம், யாருக்கும் பயந்து இதனைச் செய்யவில்லை என்று கூறியுள்ளது.