கூலி படம் குறித்த வதந்தி! ஆமிர் கானின் நிறுவனம் விளக்கம்!
'கூலி' திரைப்படம் குறித்த வதந்திகளுக்கு ஆமிர் கானின் தயாரிப்பு நிறுவனம் விளக்கம்...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ன் “கூலி” திரைப்படம் குறித்த வதந்திகளுக்கு, நடிகர் ஆமிர் கானின் தயாரிப்பு நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கூட்டணியில் உருவான “கூலி” திரைப்படம், வரும் ஆக.14 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்தியாவின் முன்னணி நடிகர்களான, நாகார்ஜுனா, உபேந்திரா, சத்யராஜ், சௌபின் சாஹிர், ஷ்ருதி ஹாசன் ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், பிரபல பாலிவுட் நடிகரான ஆமிர் கான், இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளது, மொழிகளைக் கடந்த ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், சிறப்புத் தோற்றத்தில் நடித்தது மட்டுமில்லாமல், தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்தப் படத்தை, ஆமிர் கான் விநியோகிக்கவுள்ளதாகச் செய்திகள் பரவின.
இதனை மறுத்துள்ள அவரது தயாரிப்பு நிறுவனமான ‘ஆமிர் கான் ப்ரொடக்ஷன்ஸ்’, இந்தச் செய்திகள் அனைத்தும் வதந்தியெனவும், நட்பு ரீதியாக மட்டுமே அவர் சிறப்புத் தோற்றத்தில் நடித்ததாகவும் உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:
“ஆமிர் கான் உள்பட அவரது நிறுவனத்தைச் சேர்ந்த எந்தவொரு நபரும், கூலி படத்தின் விநியோகிப்பில் ஈடுபடவில்லை. இப்படத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருடனான நட்பின் அடிப்படையில் மட்டுமே ஆமிர் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்” என விளக்கமளித்துள்ளார்.
முன்னதாக, நடிகர் ஆமிர் கானின் நடிப்பிலும், தயாரிப்பிலும் உருவாகி வெளியான “சித்தாரே ஜமீன் பர்” திரைப்படம், ரசிகர்களிடையே மிகப் பெரியளவில் வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ரெட்ட தல டீசர்!