நான் ரஜினி ரசிகர் அல்ல... கூலி பட விமர்சனத்துக்கு உபேந்திரா பதில்!
நடிகர் உபேந்திரா கூலி திரைப்படத்தில் நடித்தது குறித்து...
நடிகர் உபேந்திரா கூலி திரைப்படத்தில் நடித்தது வருத்தமில்லை எனக் கூறியுள்ளார்.
கூலி படத்தில் இவரது கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றாலும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
நடிகர் ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் கடந்த ஆகஸ்ட்டில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
Advertisement
கன்னட நடிகரும் இயக்குநருமான உபேந்திரா இந்தப் படத்தில் ரஜினியின் விசுவாசி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
இதில் நடித்தது குறித்து சமீபத்திய யூடியூப் நேர்காணலில் கூறியதாவது:
கூலி படத்தில் நடித்ததில் வருத்தமில்லை. ஒரு பிரேமில் ஓரமாக நிற்கச் சொன்னாலும் நான் தயார். ஏனெனில் நான் ரஜினியின் ரசிகர் அல்ல; தீவிர பக்தன்.
ரஜினி குறித்து தினமும் வரும் விடியோக்களைப் பார்ப்பேன். ஒருமுறை அல்ல, 50-100 முறைக்கூட அதைப் பார்ப்பேன். அவர் என்ன மாதிரியான ஒரு நடிகர், திறமைசாலி, அவரது தத்துவம் என் எல்லாமே பிடிக்கும்.
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 1.50 மணிநேரம் பேசியதே ஒரு சினிமா மாதிரி இருந்தது. இதற்குமேல் எதற்கு சினிமாவைப் பார்க்க வேண்டும் என்று இருந்தது.
கூலி படத்தில் முதலில் சிறிய கதாபாத்திரமாகத்தான் இருந்தது. பின்னர், எனக்காக அதைப் பெரிதாக மாற்றினார்கள் என்றார்.