தெரு அரசியலில் ஈடுபட மாட்டேன்: மாரி செல்வராஜ்
தன் நிலைப்பாடு குறித்து மாரி செல்வராஜ்...
இயக்குநர் மாரி செல்வராஜ் சாதிகள் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருக்கிறார். இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் வெற்றி பெற்றுள்ளதால் வணிக ரீதியாகவே தனக்கென அடையாளத்தை ஈட்டியுள்ளார்.
இறுதியாக, இவர் இயக்கத்தில் வெளியான பைசன் திரைப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்று ரூ. 80 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது. அடுத்ததாக, நடிகர் தனுஷை வைத்து புதிய படமொன்றை இயக்கவுள்ளார்.
இந்த நிலையில், விருதுநகரில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய மாரி செல்வராஜ், “என்னைப் பாராட்டுபவர்கள், என்னைப் பின்தொடர்பவர்கள் நான் என்ன மாதிரியான அரசியல் நிலைப்பாட்டில் இருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்ளுங்கள். நான் அம்பேத்கரைப் போற்றும் மார்க்சியவாதி. பெரியாரை ஏற்றுக்கொண்டவன்; நான் மானுடத்தைப் பேசும் சாதிக்கு எதிரானவன். வேறு எதையையும் எதிர்பார்த்து என்னிடம் வராதீர்கள்.
சாதி அழியுமா? எனக் கேட்டால் எனக்குத் தெரியாது. ஆனால், சாதிக்கு எதிரான ஓர் ஆளாகவே மாரி செல்வராஜ் மறைந்தான் என்கிற பெயர் இருக்கும்.
எனக்கு நிறைய ஆசைகள், கனவுகள் இருக்கின்றன. உலகின் அனைத்து கதவுகளையும் உடைக்க ஆசைப்படுகிறேன். நான் யார் தெரியுமா? என் ஊர் என்ன தெரியுமா? என என்னால் தெரு அரசியலில் ஈடுபட முடியாது. இவனை நம் பக்கம் இழுக்கலாம் என ஒருபோதும் முயற்சி செய்யாதீர்கள். நீங்கள் என் அண்ணனாக, தம்பியாக, உறவினராக இருந்தாலும் நான் சாதிக்கு எதிரானவன்தான். எப்போதும் அறத்தின் பக்கமே நிற்பேன்.” எனத் தெரிவித்துள்ளார்.