மகாராஜா இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் திரைக்கதையாளர்!
ஆஸ்கர் விருதுவென்ற திரைக்கதை எழுத்தாளருடன் மகாராஜா இயக்குநர்....
மகாராஜா திரைப்படத்தின் இயக்குநர் நித்திலனை ஆஸ்கர் விருதுபெற்ற திரைக்கதையாசிரியர் நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது.
திரையரங்க வெளியீட்டிலேயே இப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து கடந்தாண்டின் வெற்றிப்படமானது. ஓடிடி வெளியீட்டிலும் உலகளவில் கவனம் பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த ஹாலிவுட் திரைக்கதை எழுத்தாளர் அலெக்ஸாண்டர் டெனலாரிஸ் இயக்குநர் நித்திலனை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். அலெஹாந்த்ரோ இனாரிட்டு இயக்கிய ‘பேர்ட் மேன்’ (bird man) படத்திற்கு திரைக்கதை எழுதியதற்காக அலாக்ஸாண்டர் ஆஸ்கர் விருது வென்றிருந்தார்.
இதுகுறித்து பதிவிட்ட நித்திலன், “எனக்கு மிகவும் விருப்பமான படங்களில் ஒன்று bird man. அப்படத்தின் திரைக்கதை எழுத்தாளர் அலாக்ஸாண்டர் டெனலாரிஸ் நியூயார்க்கிலுள்ள அவரது வீட்டிற்கே என்னை அழைத்துப் பாராட்டினார். இதுபோன்ற வாய்ப்புகள் எல்லோருக்கும் கிடைக்காது. என்னைக் கனிவுடன் உபசரித்ததற்கு மிக்க நன்றி” எனத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
உலகளவில் கவனிக்கப்பட்ட திரைக்கதை ஆசிரியர் இயக்குநர் நித்திலனைப் பாராட்டியது ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.